சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பலன்கள்

By தேஜஸ்

நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளாக கொண்டாடப்படுவது சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையாகும். வருடத்தின் மற்ற நாட்களில் எத்தனையோ தெய்வங்களை வழிபட்டாலும், வருடத்திற்கு ஒரு முறை மிக விமர்சையாக ஞானத்திற்குரிய சரஸ்வதி தேவியை வழிபடுவது இந்த ஒரு நாளில் தான். மாணவர்கள் கல்வியில் சிறக்கமும், தொழில்கள் சிறக்கவும் இந்த நாளில் சரஸ்வதியை வழிபடுகிறோம்.

 

சரஸ்வதி பூஜை சிறப்புக்குரிய முக்கியமான நாள் என்றாலும், இந்த ஆண்டு வரும் சரஸ்வதி பூஜை கூடுதல் சிறப்புடையதாகும். இரட்டிப்பு பலன் தரக் கூடிய நாள் என்றே சொல்லலாம். இந்த நாளுக்கு அப்படி என்ன சிறப்பு, இந்த நாளில் எந்த நேரத்தில், எப்படி சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 

நவராத்திரி வழிபாடு :

 

நவராத்திரியின் நிறைவு நாளாக வரக் கூடியது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் வீரத்தை வழங்கி, விருப்பங்களை நிறைவேற்றும் துர்கையை வழிபட வேண்டும். அடுத்த மூன்று நாட்கள் உலக வாழ்க்கைக்கான அனைத்து விதமான செல்வ நலன்களையும் வழங்கும் மகாலட்சுமியை வழிபட வேண்டும். நிறைவாக வரும் மூன்று நாட்களில் ஞானத்தை வழங்கும் சரஸ்வதியை வழிபட வேண்டும் என நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். சரஸ்வதி பூஜையுடன், ஆயுத பூஜையும் சேர்த்து கொண்டாடுவது வழக்கம்.

 

சரஸ்வதி பூஜை வழிபாடுப்ஏன் ?

 

கல்வி, கலைகளுக்கு உரிய தெய்வமாக கருதப்படும் சரஸ்வதிக்குரிய வழிபாட்டினை நவராத்திரியின் நிறைவு நாளில் தான் மேற்கொள்கிறோம். சிலர் படிக்கும் குழந்தைகள் மட்டும் தான் சரஸ்வதியை வழிபட வேண்டும் என நினைக்கிறார். ஆனால் எவ்வளவு தான் செல்வம், வீரம், அதிர்ஷ்டம் என அனைத்தும் இருந்தாலும் ஒருவனுக்கு ஞானம் இருந்தால் மட்டும் தான் அவன் வாழ்க்கையில் வெற்றியை பெற முடியும். கிடைத்த வெற்றியையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஞானம் இருந்தால் மட்டும் தான் எந்த ஒரு விஷயத்திலும் சரியான முடிவை எடுக்க முடியும். அந்த முடிவுகள் தான் வெற்றியை தரும். அதனால் தான் ஞானத்தை பெறுவதற்கான சரஸ்வதியை பூஜைக்கு அடுத்த நாள், வெற்றியை பெறுவதற்கான விஜயதசமியை கொண்டாடுகிறோம்.

 

சரஸ்வதி பூஜை சிறப்பு :

 

இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் நவராத்திரியின் நிறைவு நாள் அக்டோபர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்று காலை 07.22 வரை அஷ்டமி திதி உள்ளது. அன்று உத்திராடம் நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. உத்திராடம் நட்சத்திரம் சூரியனுக்குரிய நட்சத்திரம் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் தான் தலைமை பதவி, அரசாங்க பதவி ஆகியவற்றை தரக் கூடியவர். அதே போல் உத்திராடம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முழு முதற்கடவுளும், ஞான வடிவமுமான விநாயகப் பெருமான். ஞான முதல்வனான விநாயகருக்குரிய நட்சத்திரம் வரும் நாளில் இந்த ஆண்டு ஞானத்தின் கடவுளான சரஸ்வதி தேவிக்குரிய பூஜை நாள் வருவது தனிச்சிறப்பாகும்.

 

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வழிபாட்டு முறை :

 

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை என்பது நம்முடைய வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கக் கூடிய, நம்முடைய வாழ்க்கை எதை அடிப்படையாக வைத்து நடந்து கொண்டிருக்கிறதோ அந்த பொருட்களை வைத்து வழிபடுவதற்கான நாளாகும். வீட்டில் படிக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்களின் புத்தகம், பேனா போன்றவற்றை வைத்து வழிபடலாம். தொழில் செய்பவராக இருந்தால் அதற்கு என்னென்ன பொருட்கள் பயன்படுகிறதோ அதை வைத்து வழிபடலாம். நாம் கற்கும் கல்வி, கலைகள், செய்யும் தொழில்கள் வளர்ச்சி அடைய வேண்டும். நம்முடைய வாழ்க்கை மேலும் மேலும் உயர்ந்த நிலையை அடைந்து, சிறக்க வேண்டும் என வழிபட வேண்டும்.

 

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை நல்ல நேரம் :

 

பெரும்பாலானவர்கள் விஜயதசமி அன்று தான் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, வித்யாரம்பம் செய்து வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் தற்போது சரஸ்வதி பூனை அன்றே பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும், வித்யாரம்பமும் நடத்தப்படுகிறது. அதனால் இந்த ஆண்டு வித்யாரம்பம் மற்றும் சரஸ்வதி பூஜை செய்வதற்கான நல்ல நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 

வித்யாரம்பம் - காலை 08.20 முதல் 10.20 வரை

 

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வழிபாட்டு நேரம் :

 

காலை 08.20 முதல் 10.20 வரை

பகல் 12 முதல் 01.30 வரை

மாலை 6 மணிக்கு பிறகு

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE