விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?

By சரவணன்

தற்போது விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு இடங்களில் பூஜைகளுடனும், வழிபாடுகளுடனும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் தற்காலிகமாக வைத்து வழிபட்ட விநாயகரை ஆற்றில் சென்று கரைத்து விடுவார்கள். இதற்கான காரணம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணலை அள்ளி எடுத்து சென்றுவிடும். அதனால் அவ்விடத்தில் நீர், நிலத்தடியில் இறங்காமல் ஓடிக் கடலில் சேர்ந்துவிடும். இதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடும்.

நம் முன்னோர்கள் நீர் ஆற்றில் தங்குவதற்கு கெட்டியான களிமண்ணை ஆற்றில் கரைத்தால் அந்த மண் ஆற்றில் கரைந்து ஆற்று நீரை தடுத்து நிலத்தடி நீரை உயர்த்திவிடும் என்று இதற்கொரு தீர்வு கண்டனர்.

அதனால் தான் குறிப்பிட்டு ஆடி மாதம் முடிந்து அதற்கு அடுத்த மாதமான ஆவணி மாத சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வந்துள்ளனர்.

அன்று களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை செய்து வைத்து வணங்கி வழிபாடு செய்து விட்டு ஆற்றில் கரைத்து வந்துள்ளார்கள்.

இப்படி ஒவ்வொரு வீட்டிலும் இருந்து களிமண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கும் பொழுது அந்த இடத்தில் நீர் பூமிக்குள் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் அதிகரிக்கும்.

விநாயகர் சதுர்த்தி அன்று உருவாக்கப்படும் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் ஆரம்பத்தில் ஈரப்பதமாக இருப்பதால் அதை அன்றே கரைத்தால் ஈரமான மண்ணும் ஆற்று நீரில் அடித்து செல்லப்படும் வாய்ப்புள்ளதால் சதுர்த்தி முடிந்து மூன்றாவது நாளில் சிலையின் மண் நன்றாக கெட்டியாகியிருக்கும்.

அதனால் அப்பொழுது கரைக்கும்போது மண் ஆற்றில் கரைந்து அப்படியே நீரில் அடியில் படிந்து விடும். அதனால் நீர் அந்த இடத்தில் தடுக்கப்பட்டு களிமண்ணால் உறிஞ்சப்பட்டு நிலத்தடியில் தங்கிவிடும்.

அதனால் தான் விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைத்து வந்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

அதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையை தீர்க்கும். இதனால் தான் நமது முன்னோர்கள் விநாயகர் சிலைகளை ஆற்றில் மட்டும் கரைத்து வந்துள்ளனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE