சனி தோஷம் போக்கும் ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர்!

By தேஜஸ்

சனிப்பரிகார தலங்களில் பழமையானது ஏரிக்குப்பம்.

கோவில்களில் இருக்கும் தெய்வீக விக்கிரகங்கள் அதன் அடியில் புதைக்கப் பட்டிருக்கும் செப்பு யந்திரத் தகடுகளால் தான் தெய்வீகசக்தி பெறுகின்றன.

இந்த தெய்வீக சக்தி கொண்ட தகடுகள் பல இலட்சம் தடவை மந்திர உரு ஏற்றப்பட்டு கோவில் மூலஸ்தானத்தில் பதிக்கப்படுகின்றன. இதன் மீது தான் தெய்வீகசிலைகள் ஸ்தாபிக்கப்படுகின்றன.

ஆனால், கல்லில் யந்திரத்தகடு ஒன்றை சித்தர்கள் பொருத்தி சுயம்பு சனீஸ்வரரை வழிபட்ட தலமே ஏரிக்குப்பம்.

ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோவில்.ஏரிக்குப்பம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் களம்பூர் அஞ்சலில் அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு ஆரணியிலிருந்து நடுக்குப்பம் வழியாக படவேடு கிராமத்திற்கு செல்லும் வழியில், ஆரணியிலிருந்து 10 கி.மீ.தூரத்தில் உள்ளது.

வேலூர் திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் உள்ள சந்தவாசல் கிராமத்திலிருந்து ஆரணிக்கு வரும் வழியில் 3 கி.மீ.தூரத்தில் உள்ளது.

இந்த கோவில் போகர் 3000 என்ற வைத்திய புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இங்கு சனீஸ்வர பகவான் யந்திர வடிவில் 5 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட அறுகோண வடிவத்தில் அமைந்துள்ளார். அதன் ஆறு முனைகளில் திரிசூலமும், அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமார் வடிவங்களும் இடம்பெற்றுள்ளன.

யந்திர சிலையின் மேல்பக்கம் தென்புறமாக சூரியனும், நடுவில் ஸ்ரீசனீஸ்வரபகவானின் வாகனமான காகத்தின் உருவமும், வலப்புறமாக சந்திரனும் உள்ளனர்.

அவற்றின் கீழே ஷட்கோண யந்திரமும் நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரன் ஆகியோருக்கான பீஜாட்சர மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஒரு கண்ணாடியை இந்த யந்திரத்தின் முன் வைத்து பார்த்தால், எழுத்துக்கள் நேராகத் தெரியும்படி அமைந்துள்ளது.

இதுபோன்றதொரு அமைப்புடைய சிலை வடிவத்தை, அதிலும் சனீஸ்வர அம்ச சிலாரூபத்தை ஏரிக்குப்பம் தவிர வேறு எங்கும் காண்பதரிது.

சுயம்பு சனீஸ்வரனாகிய இவர் ஏராளமான அற்புதங்களை செய்து வருகிறார்.
ஏரிக்குப்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வலது கை மூட்டு விலகி சிரமப்பட்டு வந்தார்.
இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டு வந்ததால், குணமாகி பழையபடி கை செயல்படத் துவங்கியுள்ளது.

சந்தவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கால் வீங்கி நடக்க முடியாமலும், கால்களை மடக்க முடியாமலும் பாதிக்கப்பட்டு இருந்த போது, ஒரு உதவியாளருடன் சனிக்கிழமைதோறும் வந்து வழிபட்டுக் கொண்டே இருந்தார்.

இன்று அவரது கால்கள் குணமடைந்து யாரது உதவியுமின்றி நடமாடத் தொடங்கிவிட்டார்.
திருமணமாகாத பெண்கள் 9 வாரம் (சனிக்கிழமை) இங்கே வந்து ஒவ்வொரு வாரமும் 9 விளக்குகள் ஏற்றி வழிபட்டு வந்தால் அவர்களுக்கு திருமணம் நடந்து வருகின்றது.

சனிபகவானின் காயத்ரி மந்திரத்தை சனிக்கிழமை, சனிப்பிரதோஷம் நாட்கள், இங்கு வந்து பீடத்தில் அமர்ந்து 108 முறை ஜபிக்கலாம்.

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தக ப்ரசோதயாத்
நீலப்பட்டு வாங்கி சனிபகவானுக்கு சாற்றலாம்.

நீல உடைகள் அணிந்துவந்து சனிபகவானை வழிபடலாம்.

கறுப்பு எள் மற்றும் கருப்பட்டி அல்லது சர்க்கரை கலந்த பண்டங்களை இடித்து சனிபகவானுக்கு படைத்து பிறருக்கு பிரசாதமாக வழங்கலாம்.

சனிபகவான் முன்பாக நல்லெண்ணெய்,நெய், இலுப்பை எண்ணெய் கலந்து சிட்டி விளக்கில் திரி வைத்து விளக்கேற்றி 9 முறை வலம்வந்து வணங்கலாம்.

கோயிலுக்கு அருகில் உள்ள காக தீர்த்தத்தில் நீராடி சனிபகவானை வழிபடலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE