வம்சம் தழைக்கச் செய்யும் வம்ச விருத்தீஸ்வரர்!

By சரவணன்

நெல்லைச் சீமையில் தாமிரபரணி நதிக்கரையில் எத்தனையோ அற்புத ஆலயங்கள் இருந்தாலும், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஒற்றுமைக்கு எனத் தனிச்சிறப்பு பெற்றது காருகுறிச்சி அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில்.

இந்த ஆலயத்தின் பின்னணியில் உள்ள வியக்கத்தக்க தகவல்கள் இதோ:

குழந்தை வரம் அருளும் 'வம்ச விருத்தீஸ்வரர்':

6-ம் நூற்றாண்டில் வாரிசு இல்லாமல் கவலையில் இருந்த பூதல வீர உதய மார்த்தாண்டன் என்ற மன்னன், இங்குள்ள இறைவனை வேண்டி ஆண் மகவைப் பெற்றான். தனது வம்சம் தழைக்கச் செய்ததால், இத்தல இறைவனுக்கு 'வம்ச விருத்தீஸ்வரர்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது. இன்றும் மழலைச் செல்வம் வேண்டுவோருக்கு இத்தலம் ஒரு வரப்பிரசாதம்!

அன்னை சிவகாமி அம்மனின் அபூர்வக் கோலம்: இங்கு அன்னை சிவகாமி அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்மனின் ஒரு கை மலரை ஏந்தியும், மறு கை லாவகமாகத் தொங்கிய நிலையிலும் இருப்பது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் அம்சம்.

திருமணத் தடைகள் நீங்க: ஜாதகத்தில் களத்திர தோஷம் அல்லது திருமணத் தடை உள்ளவர்கள், இங்கு வந்து மனமுருக வேண்டினால் விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர: குடும்பத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் அல்லது மனக்கசப்பில் இருப்பவர்கள், இங்கு வந்து சுவாமியையும் அம்மனையும் தரிசித்தால் மீண்டும் ஒன்று சேருவார்கள் என்பது அனுபவ ரீதியான உண்மை.

விசேஷ பூஜை: இங்கு நடைபெறும் சனி மகாபிரதோஷம் மிகவும் பிரபலம். இதில் கலந்துகொள்வது ஜாதக ரீதியான தோஷங்களைக் குறைக்கும்.

இருப்பிடம்: திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் சாலையில் (சேரன்மகாதேவி வழியாக) சுமார் 26 கி.மீ தொலைவில் காருகுறிச்சி அமைந்துள்ளது.

தரிசன நேரம்: காலை: 7:00 - 9:00 | மாலை: 5:00 - 7:30

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE