தீபாராதனை மகத்துவம்

By தேஜஸ்

எல்லாக்கோவில்களிலும் தீப ஆராதனையை கண்ணில் ஒத்திக்கொள்கின்றோம்,

சுவாமிக்கு முன்னால் காண்பிக்கின்றார்கள், எதற்கு என்று தெரியாது ஆனால், தெய்வ வழிபாட்டிற்காக காண்பிக்கின்றனர் தொட்டு வணங்குகிறோம் அவ்வளவுதான்.
அது ஏன் எல்லா கோவிலிலும் தீபாராதனை வழிபாடு, விளக்கேற்றி வழிபாடு. தீபம் என்பது ஒவ்வொரு கோவில்களிலும் பிரதான அம்சமாக இருக்கின்றது.

தீபத்திற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம். ஏன் கடவுளுக்கு முன்னால் காட்டப்படுகின்றது. சிலைகளுக்கும் தீபத்திற்கும் சம்பந்தமுண்டா.

எரிமலை வெடித்து நெருப்புக்குழம்பாகி பாறையாக மாறுகின்றது. இதில்,தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லே சிலையாக மாறுகின்றது. ஆக,ஒரு நெருப்பு என்ற ஜோதியிலிருந்து உருவாக்கப் பட்டதே சிலை. தங்கமாக இருந்தாலும் சரி, வெள்ளியாக இருந்தாலும் சரி.

அது தாமிரமாக இருந்தாலும் சரி, இரும்பாக இருந்தாலும் சரி நெருப்பில் வார்க்காமல் சிலையை உருவாக்க முடியாது. ஆன்மா பிறப்பு, இறப்பு சக்கரத்தில் வரும் பொழுது இப்படிப்பட்ட நிலைகளையே அடைகின்றது.

தங்கமாக இருக்கும் சிலைகள் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன, வெள்ளி அதைவிட கொஞ்சம் அதிகம், செம்பு அதைவிட கொஞ்சம் அதிகம், இரும்பில் யாரும் செய்வதில்லை. கற்சிலைகளோ மிகவும் அதிகமாக உள்ளன.

இந்த பிறவிகளின் இறுதியில் உலகம் அதர்மம் ஆகும்பொழுது பூமிக்கு தர்மத்தை படைக்கவரும் பரமாத்மாவை புரிந்துகொண்ட தர்மத்தின் வழியில் அவருக்கு துணைபுரியும் மிக குறைந்தவர்களே தங்க சிலை போன்றோர், மாயையின் வசத்தால் தர்ம வழியில் நடப்பதற்கு சிறிது மேலும், கீழுமான நிலையடைவோர் வெள்ளிசிலை போன்றோர், மாயையிடம் பாதியும், தர்ம வழியில் பாதியும் பயணிப்போர் செம்புசிலை ஆவர்.

இவர் கடவுள் என்ற உணர்விருக்கும் ஆனால், மாயையினால் பீடிக்கப்பட்டதால் முற்றிலும் அதனிடம் இருந்து விலகமுடியாமல், கடவுளையும் விடமுடியாமல் தர்மத்தின் வழியில் நடக்கமுடியாமல் தவித்துக் கொண்டு இருப்பவரே கற்சிலை போன்றவர்கள்.

இது ஆன்மாவின் நிலையை குறிப்பதாகும் சிலைக்கான விஷயம் இல்லை. உண்மையில் சிவபரமாத்மா கலியுக இறுதியில் ஞானத்தை கொடுக்கும் பொழுது அவரை புரிந்துகொண்டு அவரை பின்பற்றி நடப்பவர்களின் நிலையை குறிக்கின்றது.

உடல் இருப்பவர் பரமாத்மா அல்ல, பெயரே பரமாத்மா என்னும் பொழுது உடல் எப்படி இருக்க முடியும். எனவே, உருண்டை வடிவக்கல்லே ஜோதியானவரின் லிங்க சிற்பமாக மாறியது. லிங்கத்திற்கு பின்னால் ஜோதியேற்றப்பட்டு இவர் ஒரு ஜோதி என்ற நினைவுச்சின்னம் சிலைக்கு பின்னால் வைக்கப்பட்டது.

இந்த ஜோதி ஞானம் என்ற நெருப்பை உமிழ அதுவரை தன்னை கல்லாக உணர்ந்திருந்த ஆன்ம ஜோதி தங்கமாக மாறியது. ஒரு மனிதன் இறைவனை அடைவதற்கு முதலில் ஆன்ம நிலையை பயிற்சி செய்யவேண்டும்.

முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த பயிற்சியால் சிவஜோதியை நினைத்து ஆன்மாவில் பாவம் நீங்கப் பெற்றனர். பரமாத்மாவை அடைவது என்பது அவ்வளவு சாதாரண காரியமன்று.

இமயமலையில் கடும் தவம் புரிபவரே ஒரு நொடிக் காட்சிக்காக காத்திருக்கின்றார். அதுவரை அவரை அடையவேண்டு மென்பது நமது உண்மையான ஈடுபாட்டை பொறுத்தே அமைகின்றது.

நமது கற்பனைக்கும் எட்டாத சிவபெருமான் ஜோதியான தந்தையை புரிந்துகொள்வது சாதாரண விஷயமா என்ன?

பிரம்மா பூமியில் தவமிருக்கும்பொழுது ஜோதியானவரை அடைந்த பின்பு பாடிய முதல் பாடல் "யாரை அடையவேண்டுமோ அவரை அடைந்துவிட்டேன் இனி அடைவதற்கு ஒன்றுமில்லை "என்பதாகும், அவரை அடையும் வரை, ஜோதியானவரை ஒரு கடவுளாக உணரும் வரை.

அவரால் உருவாக்கப்பட்ட 33 கோடி தெய்வங்களின் ஒருவருக்கு முன்னால் நின்று அவரை நாம் புகழ் பாடிக்கொண்டு இருப்போம்.

நமது நிலை அந்த தெய்வம் வரையில்தான் வந்துள்ளது. பரமாத்மாவை அறியும் நிலையை சிலரே அடைந்துள்ளனர்.

உள் இருக்கும் ஆன்மாவே அந்த ஜீவனே -அந்த சிவன்
எனவே, உலக மக்கள் யாவரும் தேடும் ஒரு இறைவன்.

33 கோடி தேவர்களும் வணங்கிய ஒரு இறைவன் அவரே மேலான ஜோதியான தந்தை சிவன் என அறிவோம்..

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE