முடியாதவனை மன்னித்துவிடு! விரும்பாதவனை தண்டித்து விடு!

By சரவணன்

தன்னால் செய்ய முடிந்த ஒன்றைச் செய்ய விரும்பாதவன் சமுதாய விரோதி!

ஆனால் அதே காரியத்தைச் செய்ய விரும்பியும் முடியாதவன் அனுதாபத்துக்குரியவன்.
நாடிழந்த பாண்டவர்கள் துரியோதனனிடம் கேட்டது என்ன? 

குறைந்தபட்சம் சில ஊர்களாவது, சில வீடுகளாவது கொடுங்கள் என்பதுதான்.
செய்ய முடியாதா துரியோதனனால்? 
முடியும் ஆனால் விரும்பவில்லை. 
அதன் விளைவே பாரத யுத்தம். 

அனுமானும் விபீஷணனும் சொன்னபடி சீதையை திரும்பக் கொண்டு போய் விட்டு விட்டு வந்திருக்க முடியாதா இராவணனால்? 
முடியும் ஆனால் விரும்பவில்லை. 
அதன் விளைவே ராம - ராவண யுத்தம்.

உன்னால் முடிந்ததைச் செய் என்று ஏன் பெரியவர்கள் உபதேசிக்கிறார்கள்?
பெரிய விஷயத்தை செய்ய நினைத்தேன்., முடியவில்லை என்று வருந்தி கொண்டு இருக்காதே... எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய் என்பது அதன் பொருளாகும்.

என் உடம்பு என் கையளவில் எட்டுச்சாண் உயரம் இருக்கிறது என்றால் எறும்பின் உடம்பும் அதன் கையளவு எட்டுச்சாண்தான். 

உணவைச் சமைத்ததும் யாராவது ஒரு அன்னக்காவடிக்கு பிச்சைக்காரனுக்கு போட்டு விட்டு சாப்பிடுவது என்ற பழக்கம் சிலருக்கு உண்டு.

பெட்டி நிறைய பணம் இருக்கிறது. பெட்டிச் சாவியும் செட்டியார் மடியில் இருக்கிறது. கொட்டிய கண்ணீரோடு திருமணமாகாமல் கோதையர் சிலர் கஷ்டப்படுகிறார்கள். இவர் கொஞ்சம் பெட்டியைத் திறந்தால் இறைவன் அவர்களுக்கு சொர்க்க வாசலை திறப்பான். 

இவரால் முடியும்.
ஆனால் செய்ய முடியவில்லை. 
இந்து தர்மத்தில் இவருக்கு உரிய தண்டனை என்ன?

வாழ்க்கையை ஓரளவுக்காவது அனுபவிக்க விரும்பியவர்களுக்கு அதனை மறுத்தார் அல்லவா அதனால் இவர் எதனையும் அனுபவிக்க முடியாமல் போய்விடும். 
பல லட்சம் செலவு செய்து இவர் தம் பெண்ணுக்கு கல்யாணம் செய்திருப்பார்.. அது மலடியாக போய்விடும் அல்லது வாழா வெட்டியாக போய்விடும். 

அறம் செய்ய விரும்பு என்கின்றார் ஔவைப்பாட்டி.
செய் என்று அவர் ஆணையிடவில்லை.
"விரும்பு" என்றுதான் சொன்னார். காரணம் செய்ய முடியாதவரும் இருக்கலாம் அல்லவா? 
அவர் விரும்பினால் கூட போதும் அதுவே கருணையின் பரப்பளவாகும்.

வண்டி மாட்டை நீ ஒரு அடி அடித்தால் கூட அதற்கு பதிலடி உனக்கு கிடைக்கிறது.
வண்டி மாட்டுக்கு நீ வைக்கோல் போட்டால் கூட அதற்கு கைமாறாக ஒரு கவளச் சோறு உனக்கு கிடைக்கிறது.
ஆகவே விரும்பு! 
முடிந்தால் செய்!
முடியாவிட்டால் விரும்பு! 

விரும்பு என்ற உடனே தஞ்சாவூரை பார்த்து இந்த நிலமெல்லாம் நம்முடைய நிலமாக இருக்கக் கூடாதா என்று விரும்பாதே.
அதன் பெயர் விருப்பமல்ல!

ஆசை. 
விரும்புவது என்ற வார்த்தையே நல்லதை விரும்புவதைதான் குறிக்கும். 
தவறு செய்ய நினைப்பது விரும்புவதாகாது! 
திட்டமிடுவதாகும்.

ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டுக் கொண்டு, அடுத்தவனுக்கு அரை ஏக்கர் கொடுக்க விரும்பாதவன் இறுதியில் அனுபவிக்கப் போவது எத்தனை ஏக்கர்? 
வெறும் ஆறடிதான்.

சில இந்து சம்பிரதாயத்தில் அது கூட கிடையாது ஆறடி நிலத்தில் மாறி மாறி ஆயிரக்கணக்கானவர்கள் கொளுத்தப்படுகிறார்கள். 

இறைவன் தன்னுடைய விருப்பத்தை பூமியில் எப்படி பரவலாக வைத்தான்?
நீ சிந்தும் துளி கண்ணீர் எறும்பு குளிக்கும் படித்துறை ஆகிவிடுகிறது.

கழுதைக்கு உணவாகட்டும் என்று தானே காகிதத்தை கண்டுபிடிக்கும் அறிவை மனிதனுக்கு கொடுத்தான். 
விளைவுகளில் நல்லவை எல்லாம் இறைவனது விருப்பத்தின் விளைவுகளே!
நெல் என்ற ஒன்றை அவன் படைக்க விரும்பாமல் இருந்திருந்தால் சோறு என்ற ஒன்றை நாம் கண்டிருக்க மாட்டோம்.

இறைக்கின்ற கேணி ஊறுமென்று ஏன் கூறுகிறார்கள்?

கொடுக்கின்ற இடத்திலேயேதான் இறைவன் அருள் சுரக்கும் என்பதற்காக! 
தேங்கிய நீர் தேங்கியே கிடந்துவிட்டால் நோய்களுக்கு அது காரணமாகிறது.

தேங்கிய செல்வமும் தேங்கி கிடந்துவிட்டால் பாவங்களுக்கு அது காரணமாகிவிடுகிறது.
இல்லாமை கொடுமை அல்ல! இயலாமை குற்றம் அல்ல! விரும்பாமையே பாவமாகும்! 
மனிதனுடைய மனோதர்மம் சரியாக இருந்துவிட்டால் சம தர்மம் என்ற வார்த்தை அரசியலில் ஏன் அடிபட போகிறது? 

ஒவ்வொரு மனிதனும் ஏதோ அகத்தியர் காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது போலவும் இன்னும் ஆயிரம் ஆண்டு காலத்துக்கு வாழப் போவது போலவும் திட்டமிட்டு பொருள்களை பதுக்கி வைக்கிறார்கள். 
குருட்டு பிச்சைக்காரனின் சட்டியில் 10 பைசாவை போட்டுவிட்டு 20 பைசா சில்லறை எடுப்பவனும் இருக்கிறான். 

செய்ய விரும்பாமையும் திருட்டுத்தனமுமே சமூகத்தை பாழ்படுத்துகின்றன.
பிள்ளையே இல்லாத ஒரு கோடீஸ்வரர் எல்லையே இல்லாத ஒரு வீடு கட்டி இருக்கிறார். கணவரும் மனைவியும் மட்டுமே மாடி ஏறி இறங்கி கொண்டிருக்கிறார்கள்.

அவர் விரும்பினால் எத்தனையோ சுற்றங்களை வாழ வைக்கலாமே! 
மனக்கதவு அடைத்துக் கொண்டது! அதனால் வாசல் கதவும் அடைப்பட்டு விட்டது.
கடைசியில் அவரது சமாதியாவது அந்த வீட்டிற்குள் அமையப்போகிறதா என்றால் இல்லை.
அவரது வேலைக்காரனை எரித்த  இடத்திலேயே தான் அவரையும் எரிக்கப் போகிறார்கள்.
வெறும் பிரமை ,மயக்கம் சகலமுமே நிலையாகி விட்டது போல் தனக்குள்ளே ஒரு தோற்றம். 
இத்தகைய மூடர்களுக்காகவே இந்து மதம் நிலையாமை போதித்தது. 

திரும்பத் திரும்ப நீ சாகப் போகிறாய் என்று சொல்வதன் மர்மம் இதுதான்.
நிலையாமையை எண்ணி விரும்பாமையை கைவிடு! 

உன்னைப் பற்றிய புள்ளி விவரம் கணக்கெடுக்கப்படும்போது எத்தனை வீடு கட்டினாய் என்று கணக்கு எடுக்கப்படுவதில்லை. 

எவ்வளவு செய்தாய் என்பதே ஏட்டுக்கு வருகிறது.

எந்த நிலத்திலும் ஏதாவது ஒன்று விளையும் குறைந்த பட்சம் பறங்கியும் பூசணியுமாவது விளையும். 
நீ குறைந்தபட்சம் விரும்பியதை செய்தால் அதுவே உன்னை பெரிய தோட்டகாரனாக்க காரணமாகிவிடும்.
மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது என்றும் திருஷ்டிபடும் என்றும் இந்துக்கள் சொல்கிறார்கள்.

பிறருக்கு பகிர்ந்து உண்ணாமை பாவம் என்று அப்படி சொல்லுகிறார்கள்.
சரியோ தவறோ செய்ய முடியாதவனுக்கு நல்ல இருதயத்தையும் செய்ய விரும்பாதவனுக்கு செல்வத்தையும் வழங்கி இருக்கிறான் இறைவன். 

கடலில் நீரை வைத்து அதை குடிக்க முடியாமல் ஆக்கியவன் அல்லவா அவன்.
இதற்கு காரணம் உண்டு. 

ஒவ்வொருவருடைய புத்தியையும் அளவெடுப்பதற்கு இறைவன் நடத்தும் நிலை அது. 
அனுபவத்தின் மூலம் ஒன்று நன்றாக தெரிகிறது செய்ய முடிந்தும் விரும்பாதவனுடைய செல்வம் மோசமான முறையில் அழிந்து போகிறது.
அவனுடைய மரணமும் அப்படியே! 

செய்ய விரும்பி முடியாதவன் உடைய நிலை முடிவில் நிம்மதி அடைகிறது.
காரணம் அவனிடம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும். ஆண்டவனுக்கு தெரியும். 
இதுவரையில் தர்மம் செய்யாத பணக்காரன் நிம்மதியாக செத்ததும் இல்லை.
அவன் சந்ததி அந்த செல்வத்தை அனுபவித்ததும் இல்லை!

ஏன் பலருக்கு சந்ததியே இல்லை!

அர்த்தமுள்ள இந்து மதம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE