பாலியல் கதைகள் எல்லா மொழியிலும் இருக்கு. அதை திரட்டுவதாலும், வெளியிடுவதாலும் நம் ஆச்சாரம் போய்விடும் என்று அரற்றுவது பேதமை. மானுடவியலில் இதெல்லாம் இருக்கு. மனுஷன் எங்கெல்லாம் இருக்கானோ அங்கெல்லாம் மனுஷநாத்தம் இருக்கும்.
இல்லாததை நான் சொல்லவில்லை. இவை மக்களிடையே உள்ள கதைகள். ராஜநாராயணன் உண்டாக்கிய கதைகள் அல்ல. அதை அவ்வளவையும் சேகரிக்கணும்.
ஆபாசம் என்பதை ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டால் கூட இதைத் தெரிந்து கொள்வதால் ஒருவன் கெட்டுவிடுவான் என்று சொல்ல முடியுமா? நான் சின்ன வயதில் இதுபோல் எவ்வளவோ கதைகள் வண்டி வண்டியா கேட்டிருக்கேன். பாலியல் சம்பந்தமான விஷயஞானம் கிடைத்திருக்கிறதே, தவிர கெட்டுப்போய்விடுவோம் என்பதல்ல.
பாலியல் கதைகள் அத்தனை விஷயங்களையும் படித்துப் பார்த்தால் அதன் காலகட்டம் கி.மு. கி.பி. என்பது போல நம் சமூகத்தில் திருமணம் என்ற மரபு வருவதற்கு முன்னால் - திருமணத்திற்குப் பின்னால் என்று கொள்ள வேண்டும். மானுட வளர்ச்சியில் ஒரு கட்டத்தில்தான் திருமணம் வருகிறது.
ஒவ்வொரு வசவுகளுக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கு. இப்போது வசவுகளைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். விஷயம் தெரியாதவன் சொல்வான், இந்த கி.ரா. வுக்கு கிறுக்கா வசவுகளைத் திரட்டிகிட்டு அலையறான் என்று நையாண்டி செய்வான்.
நான் கதை எழுதுவதைத் தள்ளி வைத்துவிட்டு, இதைச் செய்ய யாருமில்லாததால் செய்கிறேன்.
- கி.ரா.