ஒரு பாறை ஒரு மனிதனுக்கு எப்படியெல்லாம் பயன் கொடுக்கும். கொஞ்ச நேரம் உட்கார்ந்து ரிலாக்ஸ் பண்ண உதவும். இல்லையெனில் எதாவது காய வைக்க... கோவில் கட்ட, இல்லன்னா சாமி சிலை செய்யமுடியும், வீடு கட்ட, கோவில் கட்ட உதவும். ஒரு பாறை ஒரு மதக்கலவரத்தையே உண்டு பண்ண பார்த்தது என்றும் அப்படி ஒரு நிகழ்வு நிகழாமல் தடுக்கப்பட்டு தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்துப்போகும் சிறந்த சுற்றுலா தலமா மாறிப்போன அந்த பாறையின் கதையை உங்களுக்கு தெரியுமா?!
கன்னியாக்குமரிக்கென்று பல சிறப்புகள் உண்டு. பாரதத்தாயின் பொற்பாதம், நித்தியக்கன்னியான பகவதி அம்மன் கோவில், முக்கடல் சங்கமிக்கும் இடம், சூரிய அஸ்தமனம் ஆகும் இடம், உலகப்பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு 133 அடில சிலை, காந்தி நினைவு மண்டபம்ன்னு இந்த ஊர்ல எத்தனையோ இடங்கள் இருந்தாலும் அதில் மிக முக்கியமானது வங்கத்து சிங்கம் விவேகானந்தர் கரையிலிருந்து நீந்தி கடலுக்குள் சென்று மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி அமர்ந்து தியானம் செய்த ஸ்ரீபாதபாறை என்றும் அழைக்கப்படும் விவேகானந்தர் பாறையும் ஒன்று.
சதாசர்வக்காலமும் பகவதி அம்மனின் புகழினை சொல்லி ஆர்பரித்துக் கொண்டிருக்கும் நீலக்கடலில் இருந்தாலும் மிக அமைதியாகவும், சாந்தமாகவும் இருக்கும் இம்மண்டபம். இம்மண்டபம் எந்த கட்டிடக்கலையினை போலில்லாமல் இந்தியநாட்டின் ஒட்டு மொத்த கட்டிடக்கலவையாய் இருந்து தேசத்தின் ஒன்றுப்பட்ட தன்மையை உணர்த்துது. இன்று சகலரும் வந்து செல்லும் இம்மண்டபம் ஒருகாலத்தில் மிகப்பெரிய மதக்கலவரம் ஏற்படக்கூடிய இடமாய் இருந்ததுன்னு சொன்னா நம்புவீங்களா?! இன்றைக்கு ஒற்றுமைக்கும், தூய்மைக்கும், அடையாளமாய் இருக்கும் இந்த இடத்தின் பூர்வீக கதையை பார்ப்போம்.