பருவமழை: தண்ணீரில் மிதந்து செல்லும் ஒரு டிரோன் கேமரா

By News Room

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், பெருமழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரில் மிதந்து செல்லும் ஒரு டிரோன் கேமரா [Unmanned Hover Craft]  மற்றும் 4 டிரோன் கேமராக்கள் (Unmanned Arial Vehicle) மூலம் கண்காணித்தும், காவல்துறை எச்சரிக்கை அறிவிப்புகள் ஒலித்தும், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த  6 நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால், சென்னை பெருநகரில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் உதவிட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய 13 சென்னை பெருநகர காவல் மீட்பு குழுக்கள் (Greater Chennai Police Rescue Team) அமைக்கப்பட்டு, 12 காவல் மாவட்டங்களிலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தியும், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றியும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சீரான போக்குவரத்துக்கு வழிவகுத்து வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், இன்று (12.11.2021) முதல் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பேரில், டிரோன்களை கையாளும் 10 தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய தனியார் குழுவினரின் ஒத்துழைப்புடன் நவீன வசதிகளுடன் கூடிய Unmanned Arial Vehicle (UAV) என்ற 4 டிரோன் கேமராக்கள் மற்றும் தண்ணீரில் மிதந்து தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட Unmanned Hover Craft (UHC) என்ற 1 டிரோன் கேமரா என மொத்தம் 5 டிரோன் கேமராக்கள் சென்னையில் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், புளியந்தோப்பு, கொளத்தூர், மெரினா கடற்கரை, பட்டிணப்பாக்கம், மயிலாப்பூர், தி.நகர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு கண்காணித்து வரப்படுகிறது. 
இந்த கேமராக்கள் மூலம் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை கண்காணித்து, மீட்பு பணிகள் செய்தும், உணவு பொருட்கள் வழங்வியும், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை வழங்கியும், ஒலி பெருக்கி மூலம் காவல்துறை எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கியும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன்பேரில், சென்னை பெருநகரில், மழை வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மேற்படி டிரோன் மற்றும் தண்ணீரில் மிதந்து செல்லும் கேமராக்கள் மூலம் கண்காணித்து, பாதிக்கப்பட்ட இடங்கள் கண்டறிந்து சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

#chennaicitypolice 
#greaterchennaipolice
#chennaipolice
#shankarjiwalips

.
மேலும்