அதிமுக பொதுக்குழு : நத்தம்விஸ்வநாதன் மேல்முறையீட்டு மனு தாக்கல்

By Senthil

அதிமுக பொதுக்குழு குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் நத்தம் விஸ்வநாதன் அப்பீல் செய்துள்ளார். 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் அப்பீல் செய்து உள்ளார். 

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. முன்னதாக், ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் பெரிதான நிலையில், அதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுக்குழுவுக்கு தடை கோரி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன் மீது விசாரணை நடத்திய தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை. திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை. பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியதும் கட்சிதான். எனவே, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு கூட்டம் நடத்தலாம். ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் மீது மட்டும் ஆலோசித்து முடிவெடுக்கலாம். மற்ற புதிய தீர்மானங்களில் ஆலோசித்தாலும் அதன் மீது எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நத்தம் விஸ்வநாதன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவர் மனு தாக்கல் செய்துள்ளார். பொதுக்குழுவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

.
மேலும்