குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.2000 முதல் தவணைத் தொகை காலக்கெடு நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து தற்போது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில கட்டுப்பாடுகளை கருத்தில்
கொண்டும் கொரோனா நோய் பரவல் சங்கிலியை உடைத்து பரவலை உடனடியாக தடுக்கும் பொருட்டு 07.06.2021 முடிய அதிக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஆணையிடப்பட்டு செயலாக்கத்தில் உள்ளது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு
வாழ்வாதாரங்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழலை கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள அரிசி குடும்ப அட்டைகள் மற்றும் அரிசி குடும்ப அட்டைகள் பெற தகுதியுடையவை என தணிக்கை மூலம் தீர்மானிக்கப்பட்டு குடும்ப அட்டைகள் விநியோகிக்க
நடைமுறையில் இருந்த குடும்பங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 2,09,81,900 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக 15.05.2021 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.2000/- வீதம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 31.05.2021 முடிய இவற்றில்
98.4 சதவீதம் குடும்பங்கள் நிவாரண உதவித் தொகை பெற்று சென்றுள்ளனர்.


மீதமுள்ள குடும்பங்களில் நோய் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்ற காரணத்தினாலும் முகவரி மாற்றம் செய்து போக்குவரத்து வசதியின்மை காரணமாக நியாயவிலைக் கடைக்கு செல்ல இயலாத நிலையிலும்
சில குடும்பங்கள் நிவாரண உதவித் தொகைபெற இயலவில்லை என அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட குடும்பங்கள் அவர்களுக்கான நிவாரண உதவித்தொகை பெறும் வகையில் அத்தொகையினை ஜுன் 2021 மாதத்தில் சம்பந்தப்பட்ட நியாய
விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.


அட்டைதாரர்கள் உரிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் முகக்கவசம் மற்றும் சமுக இடைவெளியினை பின்பற்றியும் தங்களையும் சமூகத்தையும் நோய்தொற்று அபாயத்திலிருந்து காத்துக் கொள்ளவும் நோய் தொற்று சங்கிலியினை உடைத்திடவும் உதவும்படி
கேட்டுக் கொள்ளப்படுகிறது.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE