மனஸை அடக்கினவன் தான் முனி: - சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

By செய்திப்பிரிவு

மனஸை அடக்கினவன் தான் முனி. ‘முனிவனின் குணம் எதுவோ அதுதான் மௌனம்’ என்பதே அந்த வார்த்தைக்கு அர்த்தம். முனிவனின் குணத்தில் பேசாமலிருப்பதுதான் தலை சிறந்தது என்று பொதுக் கருத்து இருந்திருப்பதால்தான் ‘மௌனம்’ என்றால் ‘பேசாமலிருக்கிறது’ என்று ஆகி விட்டிருக்கிறது.

மனஸை அடக்கினவனின் தன்மை என்றாலும், அதுவே நம் மாதிரி மனஸ் அடங்காதவர்கள் அந்த நிலையை அடைவதற்கு உதவுவதாகம் இருக்கிறது.

பிரம்ம ஞானியான முனிவன் மௌனம், மௌனமாயில்லாமல் இருப்பது என்ற இரண்டையும் விட்டு விடுகிறான் என்று உப நிஷத் சொல்கிறது. முதலில் படித்துப் பண்டிதனாகி, ரொம்பவும் வாதங்கள் சர்ச்சைகள் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்கிறான். அப்புறம் பாண்டித்யம், பேச்சு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரே நிஷ்டையில் போய் விடுகிறான்.

அப்புறம் பிரம்ம ஞானியாகிற போது மௌனத்தையும் விட்டு விடுகிறான், மௌனமில்லா மையையும் விட்டு விடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது. இப்படிச் சொன்னால் அது எப்படி ஸாத்யம்? ஒன்று பேச்சை விட்டு மௌனமாக வேண்டும்; அல்லது மௌனத்தை விட்டுப் பேச வேண்டும். இரண்டையுமே விடுவது என்றால் எப்படி முடி யும்? அந்த ஞானியின் நிலைக்குப் போனால் தான் இது புரியும்.

அவனுக்குப் பேச வேண்டும் என்றோ, பேச வேண்டாமென்றோ எந்த சொந்த அபிப்ராயமும் ஆசையும் இருக்காது. லோகாநுக்ரஹத்துக்காக அவன் மூலம் உபதேசமாகப் பேச்சு வந்தாலும் அவன் தான் பேசுவதாக நினைக்க மாட்டான். அதை விடப் பெரிய மௌன உபதேசத்தில் தக்ஷிணா மூர்த்தி மாதிரி அவனைப் பராசக்தி உட்கார்த்தி வைத்திருந்தாலும் ‘நாம் மௌன விரதம் என்று ஒன்று அனுஷ்டிக்கிறோம்’ என்று அவன் நினைக்க மாட்டான். இதைத்தான் மௌனம், அமௌனம் இரண்டையும் விட்ட நிலை என்பது.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE