தெய்வம் பேசுமா? - காஞ்சி மகா பெரியவா

By சரவணன்

தனியார் ஆபீஸில் தன்னுடைய பதினெட்டாவது வயஸில், shorthand, typewriting, SSLC certificates உடன் வேலைக்கு சேர்ந்து, ஐம்பத்தெட்டாவது வயஸில் retire ஆகி வீட்டில் உட்கார்ந்தார் ஒரு பக்தர். 

அவர் வஹித்த பதவி, அவருக்கு ஏகப்பட்ட பணம், செல்வாக்கு எல்லாவற்றையும் குடுத்திருந்தாலும், அவருடைய உள் மனஸில் வெறும் சூன்யமாகவே இருந்தது. வேலை, வேலை என்று உயிரைக் குடுத்து உத்யோகம் பார்த்ததில், "நான் யார்?" என்று அரை நிமிஷம் கூட சிந்திக்காமல் விட்டுவிட்டார். 

அதன் பலன்? retire ஆனதும், அத்தனை நாள் மாங்கு மாங்கென்று எந்தக் கம்பெனிக்காக உழைத்தாரோ, அந்த routine, நண்பர்கள்,எல்லாமே ஒரு நொடியில், ஒரு பிரிவுபசார பார்ட்டியோடு அவரை விட்டுத் தள்ளிப் போய்விட்டன! 

பெற்ற பிள்ளையும் மாட்டுப்பெண்ணும் கல்கத்தாவில் இருந்தார்கள். அங்கேயெல்லாம் போனால், போய் இறங்கின அன்று இருக்கும் மரியாதையும் உபசரிப்பும், நாலு நாளைக்கு மேல் நீடித்தால், அது அவர் செய்த பாக்யம்!

பிள்ளை நல்ல உத்தியோகம்; ரொம்ப நல்லவன்; ஆனால், என்ன ப்ரயோஜனம்? மாட்டுப்பெண்ணும் நல்லவள்தான்.... யாருக்கு? பிள்ளைக்கு! 
பெற்றவர்களை ஒதுக்கி விட்டு, பிள்ளையை மட்டும் தன்னுடைய குடும்பமாக நினைப்பவள்; பிறந்த வீட்டார் மேல் அபரிமிதமான கரிசனம். 

இப்படி இருக்கும் வீட்டில் தான் போய் அதிக நாட்கள் தங்கினால், இப்போதிருக்கும் பேச்சு வார்த்தை கூட அறுந்து போய்விடும் என்று தயங்கினார். 

யார் வழி காட்டுவார்கள்? "நீனே அநாத பந்து" என்று பெரியவாளுடைய திருவடியில் வந்து விழுந்தார். 
மனசுக்குள், எங்கே போவது? யாருடன் தங்குவது? ஜன்மாவை கடைத்தேற்றிக் கொள்ளாமல் 
ஐம்பத்தெட்டு வருஷம் கோட்டை விட்டாச்சு !.... என்று ஒரே குழப்பம். 

எதுவுமே பேசாமல் நமஸ்காரம் பண்ணிவிட்டு ஒரு ஓரமாக நின்றார். பெரியவா அவரைப் பார்த்தார்..... 
உடனே அருகில் வந்து மிகவும் பவ்யமாக, "பெரியவா அநுக்ரஹத்ல அனேகமா எல்லா க்ஷேத்ரங்களும் தர்ஸனம் பண்ணிட்டோம். போனவாரம் தலைக்காவேரி போயிட்டு, அப்டியே காவேரிப்பூம்பட்டிணம் போய்ட்டு வந்தோம்..." 

"காவேரி உற்பத்தி ஸ்தானத்லயும், சங்கமத்துலேயும் ரொம்ப குறுகலாத்தானே இருக்கு?" 
"ஆமா....." 
"காவேரி, ரொம்ம்...ம்ப அகலமா இருக்கற மத்ய ஸ்தானத்துக்கு என்ன பேரு?" 
"அகண்ட காவேரி" 
"அது எங்க இருக்கு?"

"திருச்சி பக்கத்ல ..." 
"அந்த ப்ரதேசத்துக்கு என்ன பேரு?" 
பக்தர் முழித்தார்!..... 
"மழநாடு...ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?" 
"எங்க தாத்தா சொல்லுவார்" 

"காவேரி தீரம்தான் மழநாடு; ரொம்ப ஆசாரக்காரா இருந்த நாடு; ஒன்னோட தாத்தா இருந்த எடம்" 
பக்தருக்கு இதெல்லாம் எதுவுமே தெரியவில்லை. நெளிந்தார்.

ஆஹா! அடுத்து பெரியவா, இவர் எதுவும் சொல்லாமலேயே, இவருடைய குழப்பத்தை தீர்த்து வைத்தார்! 
"திருச்சில ஜாகை வெச்சுக்கோ! 

தெனமும் ஒரு கோவிலுக்கு போ! உச்சிப் பிள்ளையார், மாத்ருபூதேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணசீலம் ஸ்ரீநிவாஸ பெருமாள்.... இப்டியா தர்சனம் பண்ணிண்டு இரு!" 
"தெய்வம் பேசுமா?"...என்று சந்தேஹம் வருபவர்களுக்கு, இதோ! தெய்வம் பேசுகிறது! என்று உண்மையான மஹான்கள் முன்னால் கொண்டு போய் நிறுத்தி விடலாம். 

கண்களில் நன்றிக் கண்ணீரோடு நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவா சொன்னபடி திருச்சியில் ஜாகை பார்க்கச் சென்றார். 

மலைக்கோட்டை தெருவில் அம்சமான வீடும் கிடைத்தது! 

பெரியவா சொன்னபடி தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டபடியால் கட்டாயம் "வீடு பேறும்" கிடைக்கும்.

சொன்னவர்-மணக்கால் ராமன்.
மறுபதிவு-ஜனவரி-2013 போஸ்ட்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE