ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ?

By சரவணன்

கோடிகளைப் புறக்கணிக்கும் பெரியவாள், வரட்டிகளைக் கேட்டு வாங்கிக் கொள்கிறார்

(ஒரு ஏழைப் பாட்டியிடமிருந்து)

ஒரு ஏழையான கிழவி. அவளுக்கு மகேஸ்வரனைத் தெரியாது; மகாப் பெரியவாளைத்தான் தெரியும்.

தினமும் வந்து வந்தனம் செய்வாள்.

பல செல்வந்தர்கள், பெரியவாளுக்குக் காணிக்கையாக, விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டுவந்து சமர்ப்பணம் செய்வதைப் பார்த்து, 'தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே' என்று ஏங்கினாள்.

ஒருநாள் மனமுருகி பெரியவாளிடம் சொல்லி விட்டாள்.

பெரியவாள் சொன்னார்கள்;

"அவர்கள் கொண்டுவந்து கொடுக்கிற, எந்தப் பொருளையும் நான் தொடுவதுகூட இல்லை; நான் ஆசைப்பட்டுக் கேட்டதும் இல்லை.என் மனசுக்குப் பிடிக்குமான்னும் அவா நினைச்சுப் பார்த்ததில்லே! உனக்குப் பிடிச்ச ஒரு வேலை சொல்றேன், செய்கிறாயா?"

பாட்டி தவிப்போடு காத்து நின்றாள்.

"மாட்டுக் கொட்டிலில் இருந்து பசுஞ்சாணி எடுத்து, வரட்டி தட்டு. காயவைத்துக் கொண்டுவந்து கொடு. மடத்திலே தினமும் ஹோமம் நடக்கிறது.சுத்தமான பசுஞ்சாணி வரட்டி உப்யோகப்படுத்தணும். அந்த நல்ல கார்யத்தை நீ செய்யேன்..."

பாட்டியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் !.

கோடிகளைப் புறக்கணிக்கும் பெரியவாள், வரட்டிகளைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார் - ஒரு பாட்டியிடமிருந்து.

ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ?

தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE