எனக்கும் ஸ்ரீநிவாஸனுக்கும் மட்டும் தானே தெரியும்? - காஞ்சி மகா பெரியவா

By சரவணன்

பெரியவாளுக்கு எப்படி தெரிஞ்சுது?--வியந்த  பெண்மணி.

திருமாங்கல்யம்,சங்கிலிக் கொடி ஆகியவற்றை பிரார்த்தனை நிறைவேற்ற திருப்பதி பெருமாளிடம் சமர்ப்பித்த பெண்மணிக்கு. (மஞ்சள் கிழங்கு கட்டிய மஞ்சள் கயிற்றுடன்  தோற்றமளித்த பெண்மணிக்கு)--திருமாங்கல்யம் கொடுத்த பெரியவா.

கணவனுக்குத் திடீரென்று மாரடைப்பு. திருமணமாகி இரண்டு வருஷங்கள் கூட ஆகவில்லை.
அதற்குள் இவ்வளவு பெரிய சோதனை.தவித்துப் போய் விட்டாள், இளம் மனைவி.

ஏழுமலையானுக்குப் பிரார்த்தனை செய்து கொண்டாள். கணவனுடைய நோயின் கடுமை குறைந்தது. 'இனிமே பயமில்லை' என்ற உத்தரவாதம் அளித்தார்கள், டாக்டர்கள்.

திருப்பதிக்குப் போய், பெருமாள் தரிசனம் செய்துவிட்டு, காஞ்சிபுரம் சங்கர தரிசனத்துக்கு வந்தாள், பெண்மணி.

"திருப்பதி உண்டியல்லே... பிரார்த்தனையைச் செலுத்திட்டே?"-- பெரியவா,பெண்மணியிடம்.
பெண்மணிக்கு மகா ஆச்சர்யம். தான், இன்னும் அது பற்றி யாரிடமும் பேசக்கூட இல்லையே!
அருகிலிருந்த தொண்டர்களிடம் பெண்மணி சொன்னாள்.

"பெரியவாளுக்கு எப்படி தெரிஞ்சுது?. எனக்கும் ஸ்ரீநிவாஸனுக்கும் மட்டும் தானே தெரியும்!!" என்று சொன்னாள்.

பெரியவாளிடம் பெண்மணி சொல்கிறாள்;
"ஆமாம் பெரியவா....அகத்துக்காரரைக் காப்பாற்றிக்கொடு, திருமாங்கல்யம், சங்கிலிக் கொடி எல்லாவற்றையும் சமர்ப்பிக்கிறேன்னு, ஸ்ரீநிவாஸனுக்குப் பிரார்த்தித்துக் கொண்டேன். அவர் கடைமையைச் செய்துட்டார். நான் என் பிரார்த்தனையை நிறைவேற்றி விட்டேன்."-- பெண்மணி.

பெண்மணியின் கழுத்தில், மஞ்சள் கிழங்கு கட்டிய மஞ்சள் கயிறு பளீரென்று தெரிந்தது.
ஸ்ரீ மடத்திலிருந்து, ஒரு திருமாங்கல்யம், இரண்டு குண்டு ஆகியவற்றைக் கொண்டு வரச்சொல்லி, அந்தப் பெண்ணிடம் கொடுக்கச் சொன்னார்கள், பெரியவா.

பெண், தனி இடம் சென்று, மஞ்சள் கயிற்றில் அவற்றைக் கோத்து அணிந்து கொண்டு வந்து பக்தியும் நன்றியும் பொங்கி வழிய நமஸ்காரம் செய்தாள் பெரியவாளுக்கு.. கூடியிருந்த பக்தர்கள், அந்தப் பெண்ணின் பாக்கியத்தை எண்ணி வியந்தார்கள்.

'நூறு வயசு' என்று வாழ்த்தினார் ஒரு முதியவர்.

-கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE