கேமராவில் பதிவாகாத பெரியவா திருவுருவம்!

By சரவணன்

இது மகாபெரியவாளோட லீலையா? இல்லை கேமராவுல ஏதாவது கோளாறா?  

(பெரியவாளின் லீலையும் அனுகிரகமும்)

ஒரு சமயம் மகாபெரியவா தரிசன நேரம் முடிஞ்சதும், ஆசார அனுஷ்டானப்படி நியம நிஷ்டைகளை செஞ்சுண்டு இருந்தார். அப்போ ஒருத்தர் தான் புதுசா வாங்கின விலை ஒசந்த கேமராவோட அங்கே வந்து மகாபெரியவாளை படம் எடுக்க  ஆரம்பித்தார்.

அனுஷ்டானத்துல ஈடுபட்டிருந்த பெரியவா ஒரே ஒருதரம் கையை உயர்த்தினார் .நிறுத்துங்கர. மாதிரி அவர் கையைக் காட்டினதை, தான் போட்டோ எடுக்கறதைப் பார்த்துட்டு அதை ஆசிர்வதிக்கத்தான் கையை உயர்த்தறார்னு நினைச்சுண்டு சந்தோஷமா ஒரு ரோல் முழுக்க படம் எடுத்து தீர்த்தார்   அவர்.
அந்த சமயத்துல, அங்கே இருந்த மடத்து ஊழியர்கள், "பெரியவா போட்டோ எடுக்க வேண்டாம்னு கையை ஒசத்திக் காட்டறார். நீங்க எடுத்துண்டே இருக்கேளே..! . அவர் சொல்லியும் கேட்காம எடுத்தா ஒரு படம் கூட வராது" அப்படின்னு சொன்னா.

"பெரியவாளே என்னை ஆசிர்வதிச்சு எடுத்துக்கச் சொல்றார். நீங்க இப்படிச் சொல்றேளே....அப்படியே அவர் தடுத்ததா வைச்சுண்டாலும் போட்டோ வராமா எல்லாம் போகாது. இது ரொம்ப வெலை ஒசந்த கேமரா, புதுசா வாங்கியிருக்கேன்!" சொன்னவர் வீம்பா இன்னொரு காரியமும் செஞ்சார்

இவாள்ளாம் மகான் என்னவோ தடுத்தா படம் வராதுன்னு சொல்றாளே, நாம உடனேபோய் பிரிண்ட் போட்டுண்டு வந்து மூஞ்சியில அடிச்சாப்புல படத்தையெல்லாம் காட்டிட்டுப் போவோம்னு நினைச்சு, பக்கத்துலயே இருந்த போட்டோ ஸ்டூடியோவுல குடுத்து பிரிண்ட் போடச் சொன்னார்.

பிலிம்ரோலைப் பிரிச்சு எடுத்து கெமிகல்ல போட்டு டெவலப் பண்ணிட்டு பிரிண்ட் போட எடுத்தவாளுக்கு ஒரே அதிச்சி.பிலிம்ல ஒரு படம் கூட பதிவாகலை .அவ்வளவுதான் அந்த மனுஷருக்கு கைகாலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுத்து.

இது மகாபெரியவாளோட லீலையா? இல்லை கேமராவுல ஏதாவது கோளாறா? நெறைய பணம்குடுத்து வாங்கினதாச்சே. இப்போ என்ன செய்யறது? இப்படியெல்லாம் கேள்விகள் ஓடித்து அவருக்குள்ளே. அந்த பயத்தோடேயே மகாபெரியவா இருந்த இடத்துக்கு திரும்பவும் வந்தார்.

முகத்துல பயமும் வேதனையுமா அவர் வர்றதைப் பார்த்ததும்,
"என்ன படம் எதுவும் வரலையா? சரி, இப்போ வேணும்கற அளவுக்கு எடுத்துக்கோ!" அப்படின்னு சொல்லிட்டு மென்மையா புன்னகைத்தார் மகாபெரியவா.

கையும் ஒடம்பும் நடுங்க பதட்டத்தோட சில படங்களை எடுத்த அவர் ,மகாபெரியவா கிட்டே ஆசிர்வாதம் வாங்கிண்டு மறுபடியும் போட்டோ ஸ்டூடியோவுக்குப் போனார். அவர் எதிர்பார்த்ததைவிட அற்புதமா பதிவாகி இருந்தது மகாபெரியவா திருவுருவம்.

அதையெல்லாம் எடுத்துண்டு வந்து மகாபெரியவா முன்னால வைச்சுட்டு, சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார். இப்பவும் தன்னோட கையை ஒசத்திக் காட்டினார் மகாபெரியவா.அது தன்னை ஆசிர்வதிக்கறதுக்குதான் அப்படிங்கறது சந்தேகம் இல்லாம அவருக்குப் புரிஞ்சுது.

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-17-05-2018 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE