கொடுமைக்கார மாமியார், குணம் மாறின சம்பவம்.
"ரொம்பப் புண்ணியம் பண்ணியிருக்கேன். மாமியார்க்காரி மாறிட்டா, இல்லைன்னா இந்தப் பொண்ணு என்னைப் பூச்சாண்டின்னு சொல்லியிருக்கும்"----பெரியவா.
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
தட்டச்சு வரகூரான் நாராயணன்.
ஒரு வைஷ்ணவப் பெண், மயிலாப்பூரிலிருந்து ஸ்ரீ மடத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார். கடிதம் மிகவும் உருக்கமாக இருந்தது.
"என்னை என் மாமியார் மிகவும் கொடுமைப் படுத்துகிறார். எவ்வளவு சுத்தமாக வேலை செய்தாலும், குற்றம் கண்டு பிடிக்கிறார்.எப்போதும் என் பிறந்தகத்தைப் பற்றி வசைமாரி,இளக்காரம்,அசூயை, ஒரு நிமிஷம் கூட என்னை நிம்மதியாக இருக்க விடுவதில்லை.நான் எதிர்த்துப் பேசுவது இல்லை. ரொம்பவும் பொறுத்துக் கொண்டிருந்தாலும், சில நேரங்களில் மனம் தளர்ந்து போய் விடுகிறது.ஏதாவது விபரீதம் ஆகிவிடப் போகிறதே என்று கவலையாக இருக்கிறது.உங்களை எல்லாரும் நடமாடும் தெய்வம், பேசும் தெய்வம் என்று கூறுகிறார்கள். அது உண்மையானால், என் கஷ்டங்களைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று சேவித்துக் கேட்டுக் கொள்கிறேன்"--வைஷ ணவ அம்மையாரின் கடிதம்.
மானேஜர் கடிதத்தைப் படித்து முடித்ததும், பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள்.
"அவனைக் கூப்பிடு" என்றார்கள்.
ஒரு சிஷ்யர் வந்து நின்றார்.
"இந்த லெட்டர்லே இருக்கிற விலாசத்தை வாங்கிக்கோ. மயிலாப்பூர் மடத்துக்குப் போ. மடத்து மனுஷ்யாள் வீட்டு ஸ்த்ரீயை லெட்டர் எழுதியிருக்கிற பெண்கிட்ட போகச் சொல்லு. சீதை,தமயந்தி, திரௌபதி கதையைச் சொல்லி.. அவாளும் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா. பொறுமையா இருந்தா.. பின்னாடி பகவான் கிருபையாலே சௌக்யம் அடைஞ்சாங்கன்னு ஆறுதல் சொல்லச் சொல்லு."---பெரியவா.
அவ்வாறே, மயிலாப்பூர் மடத்து அன்பரின் மனைவி, பக்குவமாக செயல்பட்டாள்.
சில நாள்கள் சென்ற பின், அதே பெண்ணிடமிருந்து கடிதம் வந்தது.
'சௌக்யமாக இருக்கிறேன்.மாமியார் குணம் மாறிவிட்டார்.அதட்டல்,மிரட்டல்,எல்லாம் மறைந்தே போச்சு பெரியவா நிஜமா தெய்வம்தான்!'--வைஷணவ பெண்ணின் கடிதம்.
பெரியவாள் மெதுவாகச் சிரித்துக் கொண்டார்கள்.
"ரொம்பப் புண்ணியம் பண்ணியிருக்கேன்; மாமியார்க்காரி மாறிட்டா; இல்லைன்னா.. இந்தப் பொண்ணு என்னைப் பூச்சாண்டின்னு சொல்லியிருக்கும்;" பெரியவா.