ஒளிர வேண்டும் - பெண் கவிதை

By சரவணன்

ஒளிர வேண்டும்
என்று முடிவெடுத்தால் அது
அந்தியின் வெளிச்சம் போல்
இருக்க வேண்டும்
ஜன்னல் வழியே
நுழையும் காற்றில்
திரை மெதுவாக
அசைவதுபோல்
மனதை அசைப்பது
சூடான சாதத்தில்
வெண்ணெய் உருகும்
அமைதியுடன் உள்ளத்தை
மென்மையாக்குவது
பழைய ரேடியோவில்
என்றோ கேட்டிருந்த
பழக்கமான பாடல் போல
ஒருவர் நினைவில் கரைவது
பிடித்து வைத்திருப்பதாய்
உறவுகள் சொல்லும் அதன்
இறுக்கத்தை மெல்ல அவிழ்த்து
பிடிப்புகளை நெகிழச்செய்வது
எதுவும் இங்கே
மறைவது இல்லை
கைகளை உதறாது
மெதுவாக இடம் மாறுகிறதென
உணர்வு பூர்மாய் தெளிவது
அன்பு என்பது
ஒருவரின் உள்ளத்தில்
நீயற்றும் தங்கும் ஒரு
ஞாபகத்தின் வாசனையென
அறிந்து கரையேறுவது.....
உமா மஹேஸ்வரி பால்ராஜ்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE