திருநங்கைகள் ஏன் கை தட்டுகிறார்கள்?

By தேஜஸ்

அவர்களுடைய பாலினத்தை தேந்தெடுத்தலை மறுத்தல், வீட்டிலிருந்து விரட்டப்படுத்தல், சமூகத்தில் உரிய மரியாதை தராதது, வேலை யாரும் தர முன்வராதது ஆகிய காரணங்களால் வயிற்றுப் பிழைப்புக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த வழி 'பிச்சை எடுத்தல்'. அந்த சமயங்களில் கைதட்டுதல் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு சிறந்த உத்தி.

தவிர சில வட இந்திய மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் கைதட்டுதல் என்பது தீய சக்தியை விரட்டும் ஒரு மத-நம்பிக்கையாகவும் கருதப்படுகிறது. சுயமரியாதைக்கு இழுக்கு தரும் வேலையை செய்யவேண்டிய சூழலுக்கு தள்ளப்படும்போது, அத்துடன் ஒரு மதநம்பிக்கையை இணைத்துவிட்டால் அந்த சூழலின் கடினத் தன்மை சற்று குறையலாம்.

பிச்சை எடுத்தலைத் தவிர மற்ற நேரங்களில் கைதட்டுத்தலை உடல்மொழியில் வெளிப்படுத்தினால், அது பழக்கத்தின் காரணமாக மட்டுமே. மற்றபடி திருநங்கைகளின் உடல்மொழி கைதட்டுதல் என்றெல்லாம் கிடையாது.

கொஞ்சமே கொஞ்சமாக திருநங்கைகளை பார்க்கும் பார்வை மாறியிருக்கிறது. என் மகளின் தமிழ்-ஆசிரியர் ஒரு திருநங்கை. மாணவர்கள் அனைவரும் அவரை மரியாதையோடு நடத்துகின்றனர். ஒரு தனியார் பள்ளியில் இத்தகைய வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டதை சிந்தித்தபோதுதான் ஒன்று புரிந்தது.

அரசு அவர்களுக்கு தரும் வாய்ப்புகள் மட்டும் அவர்கள் நிலைமையை மாற்ற போதாது. நிறைய தனி மனிதர்களும், தனியார் நிறுவனங்களும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கினால் மட்டுமே காலப்போக்கத்தில் அவர்கள் நிலைமை மாறும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE