தேங்காய் உடைப்பதின் சூட்சமம் தெரியுமா?

By சரவணன்

தேங்காய் சிவனின் மூல சக்தியாக உள்ளது. தேங்காயில் உள்ள முக்கண்களின் வழியே பஞ்சபூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும்.

தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்துள்ளது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

கோவில் விக்கிரகத்தின்முன் தேங்காய் உடைக்கும்போது அந்த பஞ்சபூத சக்திகள் வெளிப்பட்டு இறைசக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது. இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது. ஒரே இடத்தில் தேங்காய் சிதறுகாய் இடும்போது அங்கெல்லாம் பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும். முச்சந்தியில் சிதறுகாய் இடும்போது அங்கே துர்சக்திகள் விரட்டியடிக்கப்படுகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE