சொந்த வீடு அமைய செவ்வாய் கிழமையில் இதை செய்?

By தேஜஸ்

நமது முன்னோர்கள் நவகிரகங்களில் ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரகங்களின் தொடர்போடு, வார தினங்களுக்கு (ஞாயிறு முதல் சனி வரை) பெயர் வைத்தனர்.

அந்த வகையில் செவ்வாய் கிரகத்தின் தொடர்புடன் செவ்வாய்க்கிழமை உண்டாயிற்று. கிரகங்களில் மங்களகரமான கிரகம் செவ்வாய். அதனால் தான் குடும்பத்தில் மங்களகரமான விசேஷங்கள் நடைபெறுவதற்கு செவ்வாய்க்கிழமை விரதத்தை மேற்கொள்கிறோம்.

முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமையாக செவ்வாய் இருக்கிறது. ஆனால், நாம் விசேஷங்களை செய்வதற்கும், பொருட்களை வாங்குவதற்கும், புதிய செயல்களை துவங்குவதற்கும், புத்தாடை அணிவதற்கும் என பல விஷயங்களுக்கு செவ்வாய்க்கிழமையை தவிர்த்து விடுகிறோம்.

பெயரிலேயே மங்களம் இருப்பதால் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் செயல்களில் நிச்சயம் வெற்றி உண்டாகும். அதேபோல் மங்களகாரகன் என்கிற பெயர் மட்டுமல்லாமல், செவ்வாய்க்கு பூமிகாரகன் என்கிற பெயரும் உண்டு.
நவகிரகங்களில் ஒரு மனிதனின் ரத்தம், நோய் எதிர்ப்பு சக்தி, தைரியம், பூமி சம்பந்தமான சொத்துக்கள், செவ்வாய் தோஷம், சொந்த வீடு ஆகியவற்றிற்கு காரகனாக செவ்வாய் பகவான் இருக்கிறார்.

ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் நிலை சரி வர அமைய பெறாதவர்கள் செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து வழிபட நன்மை உண்டாகும்.

செவ்வாய் வழிபாடு :
செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும். வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி அடையும். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.

9 செவ்வாய்க்கிழமை விரதம்:
செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் குளித்து அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். பிறகு வீட்டிற்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம்.
மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவுசெய்ய வேண்டும்.

இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால்.
செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைந்து நன்மை உண்டாகும்.
சொந்தவீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும்.
பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சொந்த வீடு அமைய..
செவ்வாய்க்கு மங்களகாரகன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு. சொந்த வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும். முருகப்பெருமானின் திருவருளும் வேண்டும்.

எலி வலையாக இருந்தாலும் தனி வலை வேண்டும் என்று சொல்வார்கள். சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவோடு நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவர்கள் ஏராளம். கோடி கோடியாக பணம் வைத்திருக்கும் சிலருக்கு சொந்த வீட்டில் வசிக்கும் யோகம் கிடைக்காது. சொந்த வீடு கட்டி வசிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து மனதார வழிபட்டால் நீங்கள் சொந்த வீடு கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும்.

பரிகாரம் :
செவ்வாய்க்கிழமைகளில் காலையில் எழுந்து குளித்து விட்டு ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் நாணயத்தை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். அதை வீட்டில் உள்ள முருகன் படத்தின் முன்பாக வைத்து வணங்க வேண்டும்.

வீடு கட்ட அருள் புரிய வேண்டும் என்று கூறி வணங்கி தொடர்ந்து 11 வாரங்கள் இதுபோல நாணயங்களை எடுத்து வைக்க வேண்டும். 11 வாரங்கள் கழித்து அந்த நாணயங்களை சிவப்பு துணியில் முடிந்து வைத்து செவ்வாய் ஸ்தலமான பழனி முருகன் கோவில் உண்டியலில் கொண்டு போய் செலுத்தி வேண்டிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வைகாசியில் வாஸ்து செய்ய விசாகத்தில் பிறந்த நாயகன் முருகப்பெருமானின் அருள் கிடைக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE