இன்றைய சூழலில் கல்லூரியில் உயர் கல்வி கற்கும் இளம் பெண்களும், திருமணமான இளம் பெண்மணிகளும் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் தீவிர கவனத்தை செலுத்துவதில்லை. குறிப்பாக மாதவிடாய் சுழற்சி விடயத்தில் அக்கறை கொள்வதில்லை. இதன் காரணமாக அவர்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுகிறது.
அதே தருணத்தில் உங்களது வீட்டில் உள்ள பெண் பிள்ளைகளின் வார்த்தைக்கு வீட்டில் உள்ள ஏனைய குடும்ப உறுப்பினர்கள் மதிப்பளிக்கவில்லை என்றாலோ அல்லது அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தினாலோ அவர்களுக்கு அதாவது நீங்கள் வசிக்கும் வீட்டிற்கு பெண் சாபம் தொடர்பான வாஸ்து குறைபாடு இருக்கிறது என உணர்ந்து கொள்ள வேண்டும்.
பொதுவாகவே ஒரு வீட்டில் ஆணும் , பெண்ணும் அதாவது குடும்பத் தலைவரும், தலைவியும் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துகிறார்கள் என்றால் அவர்களுடைய வீட்டில் உள்ள தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு திசைகள் வலிமையானதாக அமையப்பெற்றிருக்கும். அதே தருணத்தில் கணவன் - மனைவிக்கு இடையே எப்போதும் பிரச்சனை எழுந்து கொண்டே இருக்கிறது என்றால் அவர்கள் வாழும் வீட்டில் உள்ள தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு திசைகள் வலிமை இழந்து, வாஸ்து குறைபாட்டை அதிகரித்து, பெண் சாபத்திற்கான கெடுபலன்களை வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணரலாம்.
இதற்கு புரசு மரம் என்ற ஒரு மரத்தின் செடியை வாங்கி வந்து வீட்டில் தென்கிழக்கு திசையில் அமைத்து வளர்க்கத் தொடங்கினால் உங்களது வீட்டில் சுக்கிர பகவானின் அருளாசி அதிகமாகி பெண்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான அனைத்து குறைபாட்டிலும் நிவாரணம் கிடைக்கும். மேலும் அவர்களின் வார்த்தைக்கு வீட்டிலும் , வெளியிலும் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். இது உங்களது பெண் பிள்ளையை மனதளவில் உற்சாகப்படுத்தி, மகிழ்ச்சியை உண்டாக்கும்.
உடனே நம்மில் பலரும் வீட்டில் புரசு செடியை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று விவரித்தால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் புரசு குச்சி எனும் புரசு மரத்தின் காய்ந்த கிளைகளை வீட்டில் தென்கிழக்கு பகுதியில் வைத்து விடுங்கள். அதிலிருந்து வெளியாகும் நேர் நிலையான ஆற்றல் பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அந்த குடும்பம் முன்னேற்றத்திற்கு முதல் விதையை பதியமிடும். பெண் சாபம் இந்த பிறவியிலும் நீடித்தால் அந்த வீட்டில் தனமும், தானியம் இருந்தாலும் கூட முன்னேற்றமும், வளர்ச்சியும் பெரிய அளவில் தடைப்படும்.