நினைவாற்றலை மேம்படுத்துவதற்கு உடற்கூறு ரீதியாக சாத்தியமில்லை. மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்ற விளம்பரங்கள் எல்லாம் ஏமாற்று வேலைதான்.
சிறந்த நினைவு என்பது நலம் மிகுந்த மூளையைப் பொறுத்தது.
எனவே, நல்ல மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், ஒமேகா-3 போன்ற தாதுக்கள் அதிகம் உள்ள உணவு உண்பது நலம் பயக்கும்.
காய்கறிகள், கீரைகள், பாதாம், வால்நட் போன்ற கொட்டை வகைகள், தேன், கிரீன் டீ, பால் சம்பந்தப்பட்ட உணவுகள்,முட்டை, ஒமேகா -3 அதிகம் உள்ள மீன் போன்ற உணவுகள் மூளை வளர்ச்சிக்கும், நினைவாற்றலுக்கும் உதவும்.
சரியான, போதுமான அளவு தூக்கமும், உடற்பயிற்சியும் அவசியம்.
இது தவிர நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான சில வழிமுறைகளைப் பார்ப்போமா?
இவைகள் நம் குழந்தைகளுக்கும், கல்வி கற்கும் மாணவர்களுக்கும் பயன்படும்.
1) எதைக் கற்றாலும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு கற்க வேண்டும்.
2) பொருளுணர்ந்து கற்பவை எளிதில் கற்கப் படுவதோடு நீண்ட நாட்களுக்கு நினைவிலிருத்தப்படுகின்றன.
3) எதைக் கற்பதற்கும் SQ3R முறை -- அது எதைப் பற்றி என்று ஒரு 'நோட்டம் விடுதல்' (Survey), அது என்ன என்று கேள்வி எழுப்புதல்(Questioning), வாய்விட்டுப் படித்தல்(Recite), பலமுறை திரும்பத் திரும்பக் கற்றல்(Repeat), மீள்பார்வை (Review) மிகச் சிறந்தது.
4) கற்கும் போது #ஒப்பித்தல் அல்லது மனனம் செய்தல் சுய மதிப்பீட்டுக்கு வழி செய்கிறது. எனவே, மனப்பாடம் செய்வதற்கு, குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு #ஒப்பித்தல்_முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது.
5) இடைவெளிவிட்டு சிறுகச் சிறுக (ஒவ்வொரு பத்தியாக)கற்றலே சிறந்த நினைவிருத்தலுக்கு நல்லது.
6) திரும்பத்திரும்ப கற்றல் (மீக்கற்றல் - over learning) மறத்தல் எல்லையைத் தாண்டிட துணைபுரியும்.
7) கற்பவற்றை ஏற்கனவே கற்றவற்றோடு தொடர்புபடுத்தி கற்றலும், கற்கும் பல பகுதிகளுக்கு இடையேயான தொடர்பைப் புரிந்துகொண்டு கற்றலும், படித்தபின் மனனம் செய்தலும்(self recitation) நினைவில் இருத்தலை மேம்படுத்தும் வழிமுறைகளாகும்.