பல் வலி ஏன் தாங்கவே முடிவதில்லை?

By செய்திப்பிரிவு

சிறிய பல்லுக்குள் ஏற்படும் வலி ஏன் நம் முழு உடலையும் உலுக்கி எடுக்கிறது? இவ்வளவு சிறிய இடத்தில் இத்தனை தீவிரமான வலி எப்படி உருவாகிறது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். இதற்கான விடை நமது பல்லின் தனித்துவமான அமைப்பில் உள்ளது.

ஒவ்வொரு பல்லின் உட்புறத்திலும் பல் கூழ் என்ற மென்மையான பகுதி உள்ளது. இதில் ரத்த நாளங்கள் மற்றும் நரம்பு இழைமங்கள் நிறைந்துள்ளன. இவைதான் பல்லுக்கு உயிர்ச்சத்தையும் உணர்திறனையும் வழங்குகின்றன. இந்த நரம்புகள் நேரடியாக டிரைஜெமினல் நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இது முகத்தின் பிரதான உணர்ச்சி நரம்பாகும், மேலும் மனித உடலில் மிக அதிக வலியை உணரக்கூடிய நரம்பு மண்டலங்களில் இதுவும் ஒன்று.

பல் வலியின் தீவிரத்திற்கு முக்கிய காரணம் அதன் கட்டமைப்பு. பொதுவாக உடலில் ஒரு இடத்தில் காயம் அல்லது தொற்று ஏற்பட்டால் அந்த இடம் வீக்கமடையும் (தோல் விரிவடையும்). ஆனால், பல்லின் உட்புற நரம்புகளைச் சுற்றி எனாமல் மற்றும் டென்டின் போன்ற கடினமான சுவர்கள் உள்ளன.

பல்லில் தொற்று அல்லது பாதிப்பு ஏற்படும்போது, உட்புற திசுக்கள் வீக்கமடைய முயலும். ஆனால், அந்த கடினமான சுவர்கள் விரிவடையாது. இதனால் ஏற்படும் அதீத அழுத்தம் நேரடியாக நரம்புகளை நெருக்குகிறது. இந்த அழுத்தமே நம்மைத் துடிக்க வைக்கும் அந்த இடைவிடாத தாளக்கதிர் போன்ற வலிக்குக் காரணமாகிறது.

ஒரு சிறிய சொத்தை சீழ் கட்டியாக மாறுவது என்பது வெறும் அளவீட்டு மாற்றம் மட்டுமல்ல; அது லேசான நரம்பு எரிச்சல், தாங்க முடியாத அழுத்தமாக மாறுவதைக் குறிக்கிறது.

வீக்கம் அதிகரிக்க அதிகரிக்க, நரம்புகளுக்குள் செல்லும் பாதிப்பும் ஆழமாகிறது. ஆரம்பத்தில் ஒரு சாதாரண Filling மூலம் சரிசெய்யக்கூடிய விஷயம், காலப்போக்கில் Root Canal சிகிச்சை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

வலி தாங்க முடியாத நிலைக்குச் செல்லும் வரை காத்திருக்காதீர்கள். உங்கள் பற்கள் உங்களுக்கு சமிக்ஞை கொடுக்கும் போதே பல் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE