ஆந்திரா ஸ்டைல் அரைச்சி விட்ட இட்லி சாம்பார் செய்வது எப்படி?

By தேஜஸ்

இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் சாம்பார் பொருத்தமாக இருக்கும். அந்த சாம்பார் எப்பொழுதும் போல அல்லாமல் சற்று மாறுதலாக வைக்கும் பொழுது சுவை அசத்தலாக இருக்கும். அந்த வகையில் ஆந்திரா ஸ்டைல் அரைச்சி விட்டு இட்லி சாம்பார் செய்வதற்கான ரெசிபி இதோ!

இந்த சாம்பார் செய்வதற்கு முதலில் ஒரு சூப்பர் மசாலா செய்ய வேண்டும். அதற்கு முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி பச்சரிசி, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுந்து, கால் தேக்கரண்டி வெந்தயம், ஐந்து காய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து மிதமான தீயில் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன்பின் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கப் தேங்காய் சேர்த்து கலந்து கொள்ளவும். வறுத்த இந்த பொருட்களின் சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, இரண்டு காய்ந்த வத்தல், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பத்து சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் ஒரு பெரிய தக்காளி பழம், கையளவு பொடியாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய முள்ளங்கி, நீள நீளமாக நறுக்கிய பீன்ஸ், பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் .

காய்கறிகள் வதங்கும் பொழுது அரை தேக்கரண்டி, மஞ்சள் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளவும். காய்கறிகள் பாதி அளவு வெந்ததும் வேக வைத்திருக்கும் ஒரு கப் துவரம்பருப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சாம்பார் தேவைப்படும் அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் மூடி போட்டு காய்கறிகளை வேக வைக்க வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து நாம் முதலில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதில் சேர்த்து கலக்க வேண்டும்.

அதன் பின் இறுதியாக இரண்டு தேக்கரண்டி புளி கரைச்சல், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொண்டு ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் அரைத்து விட்ட ஆந்திரா ஸ்டைல் சாம்பார் தயார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE