மணத்தக்காளி குழம்பு செய்வது எப்படி?

By தேஜஸ்

வயிற்றுப்புண், குடல்புண், வாய்ப்புண் இவற்றிற்கு மணத்தக்காளி அருமருந்தாக பார்க்கப்படுகிறது. இதை உணவில் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் கிருமிகளை வெளியேற்றி நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது..

மணத்தக்காளி வைத்து அருமையான வத்த குழம்பு செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…...
முதலில் ஒரு அகலமான கடாயில் ஏழு காய்ந்த வத்தல், ஒன்றரை தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி உளுந்து, ஒரு தேக்கரண்டி துவரம் பருப்பு, அரை தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி கடுகு, இரண்டு தேக்கரண்டி மிளகு சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக வறுக்கும் பொருட்களில் இருந்து வாசனை வர துவங்கியதும் இரண்டு கொத்து கருவேப்பிலை, ஒரு தேக்கரண்டி சீரகம், இரண்டு தேக்கரண்டி கருப்பு எள், ஒரு தேக்கரண்டி பெருங்காயம், ஒரு தேக்கரண்டி சுக்குத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இப்பொழுது நாம் வறுத்த பொருட்கள் அனைத்தும் சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக மாற்றி வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக அதே அகலமான கடாயில் நான்கு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்தி கொள்ளலாம்.....
இதில் அரை தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, தேக்கரண்டி பெருங்காயத்தூள், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய 10 பல் வெள்ளை பூண்டு, , ஒரு கப் அளவிற்கு சின்ன வெங்காயம் அதாவது 20 முதல் 25 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நான்கு பழுத்த தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் மற்றும் தக்காளி வதங்கும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு மசிந்து வரும் நேரத்தில் மூன்று முதல் ஐந்து தேக்கரண்டி மணத்தக்காளி விதைகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், எலுமிச்சை பழ அளவு ஊற வைக்க புளி கரைசல், இரண்டு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை கலந்து கொள்ளலாம். அடுத்ததாக நாம் முதலில் வறுத்து அரைத்த மசாலாவை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது மசாலாவை நன்கு கலந்து கொடுத்து அடுத்ததாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். மிதமான தீயில் மூடி போட்டு கொதிக்க விட வேண்டும். மசாலா கொதித்து வரும் நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய் துருவல், அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

குழம்பு நன்கு கொதித்து எட்டி பதத்திற்கு வரும்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுகளை சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் சேர்த்த பிறகு தேவைப்பட்டால் மட்டுமே தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மீண்டும் கலந்து கொடுத்து கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

இறுதியாக ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது சுவையான மணத்தக்காளி வறுத்து அரைத்த காரக்குழம்பு தயார்......

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE