வரமிளகாய் வத்தல் புளிக்குழம்பு செய்வது எப்படி?

By தேஜஸ்

தேவையானவை:

தனியா 2 ஸ்பூன்
மிளகாய் வத்தல் 10 (அ) 12
சீரகம் 1/2 ஸ்பூன்
வெந்தயம் 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையானது
புளி எலுமிச்சை அளவு
வெங்காயம் 2
தக்காளி 1
பூண்டு 10 பற்கள்
நல்லெண்ணெய் 1/4 கப்
தாளிக்க:
கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை

செய்முறை :
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு தனியா, மிளகாய், சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு சிவக்க  வறுக்கவும்.

பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு பற்களை சேர்த்து வெங்காயம் கண்ணாடி போல் நிறம் மாறி வரும் வரை வறுக்கவும்.

இப்பொழுது உப்பு,  மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மத்து அல்லது கனமான கரண்டி கொண்டு நன்கு மசிக்கவும்.

புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு கரைத்து அதில் விட்டு புளி வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

 ஐந்தே நிமிடத்தில் சுருண்டு வர ஆரம்பிக்கும். ஒரு துண்டு வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். வாணலியில் கடுகு, கருவேப்பிலை, சீரகம், வெந்தயம் தாளித்து தயாராக உள்ள வரமிளகாய் வத்தக்குழம்பில் கொட்டிக் கிளறவும்.

மணமான, ருசியான வரமிளகாய் வத்த குழம்பு தயார்.  இதனை சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட "ஆஹா அமிர்தம்" என்று பாராட்டுவார்கள்....
இந்த வத்த குழம்பு செய்ய சாம்பார் பொடியோ மிளகாய்த்தூளோ எதுவும் தேவையில்லை.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE