காலிபிளவர் பிரை செய்வது எப்படி?

By சரவணன்

முதலில் காலிபிளவரை சிறு சிறு பூக்களாக பிய்த்து உப்பு, மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். 1/4 வேக்காடு வெந்ததும் உடனே வடிகட்டி எடுத்து விடவும்.

மைதா மாவு, கடலை மாவு, சோள மாவு தலா 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அரிசி மாவு 1 டீஸ்பூன் சேர்த்து தேவைக்கேற்ப வத்தல் பொடி (மிளகாய் தூள்), உப்பு சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த மாவுக் கலவையினுள் வடித்த காலிபிளவர் துண்டுகளை போட்டு கலந்து கொள்ளவும். 10 நிமிடம் ஊற வைத்தால் போதுமானது.

வாணலியில் எண்ணெய்யை சுட வைத்து அதில் இந்தக் கலவையை போட்டு பொறித்து எடுக்கவும். இது வேக சிறிது நேரம் பிடிக்கும். நன்கு சல சல என சிவந்து வந்ததும் எடுக்கவும்.

கடைசியாக பொரித்த காலிபிளவர் மீது இரண்டு கீற்று கருவேப்பிலையை எண்ணெய்யில் பொறித்து எடுத்து தூவி அலங்கரிக்கவும். சுவையான காலிபிளவர் பிரை தயார்.

காலிபிளவர் பிரை சாம்பார், ரசம் சாதத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும். சிறுவர்கள் இதை விரும்பி அப்படியே சாப்பிடுவார்கள். இது எண்ணெயையும் அவ்வளவாக குடிக்காது.

குறிப்பு : காலிபிளவருக்கு புழுக்கள் வருவதால் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கிறார்கள். அதனால் உப்பு, மஞ்சள் கலந்த தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி உபயோகிப்பது நல்லது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE