‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை

By

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தயாரித்து, இயக்கும் திரைப்படம் "துருவ நட்சத்திரம்" இதில், விக்ரம் உள்ளிட்ட பல்வேறு நடிகர்-நடிகைகள் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள விஜய் ராகவேந்திரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 கவுதம் வாசுதேவ் மேனன்  "சிம்புவை வைத்து "சூப்பர் ஸ்டார்" என்ற படத்தை இயக்குவதற்காக, தங்களது நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார். அதற்கு அச்சாராமாக  கடந்த 2018-ம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி அந்த பட வேலைகள் நடைபெறவும் இல்லை, வாங்கிய முன்பணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரவில்லைவும் இல்லை. ஆகவே, அவர் எங்களிடம் பெற்ற தொகையை திருப்பி கொடுக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, "துருவ நட்சத்திரம் படத்தின் விநியோக உரிமையை விற்பனை செய்ததன் மூலம் கவுதம் வாசுதேவ் மேனன் பணம் பெற்றுள்ளார். இருந்தபோதிலும், தங்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கவில்லை" என கூறினார்.

இந்நிலையில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் சார்பில் வழக்கறிஞர் ரேவதி மணிவண்ணன் ஆஜராகி, படத்தின் வெளியீட்டு தேதி 2 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்துக்கு தடைக்கோரி கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பணத்தை திருப்பி அளிக்காமல் படத்தை வெளியிடமாட்டோம் என்று உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இன்று காலை 10.30 மணிக்குள் 2 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உத்தரவிட்டார். அவ்வாறு பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகள் என எங்கும் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE