'பிளாக் ரோஸ்' ஓடிடியில் வெளியாகிறது!

By மினி சினி

சிறு வயது முதல் இங்கிலாந்தில் வசித்து வரும் இலங்கைத் தமிழரான SJ சரண், லண்டனில் வெற்றிகரமான தொழிலதிபராக திகழந்து வருகிறார். திரைத்துறை மீது தீராத தாகம் கொண்ட இவர், இயக்குநர் ஏ எல் விஜய் உடன் 'மிஷன்' திரைப்படத்திலும், மாதேஷ் இயக்கத்தில் திரிஷா நடித்த 'மோகினி' திரைப்படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

திரைக்கதை மன்னன் என்று புகழப்படும் கே பாக்யராஜிடமும் பயிற்சி பெற்ற இவர், 'பிளாக் ரோஸ்' எனும் திரைப்படத்தை எழுதி, இயக்கி இருக்கிறார். நிழல்கள் ரவி, பிரித்விராஜ் (பப்லு), சாந்தினி தமிழரசன், நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ் பேரன் விஜேஷ், ஆனந்த் நாக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இத்திரைப்படம் ஒரு கிரைம் திரில்லர் ஆகும்.

இது வரை யாரும் மேற்கொள்ளாத புதுமையான முயற்சியாக, இத்திரைப்படத்திற்காக மிக அதிக பொருட்செலவில் பைலட் மூவி ஒன்றை சரண் உருவாக்கி இருக்கிறார். கதையின் கருவையும், மாந்தர்களையும், அவர்கள் குணாதிசியங்களையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப் படுத்தும் வகையில் இது உருவாகி உள்ளது.

மிக பிரம்மாண்டமாக அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள 'பிளாக் ரோஸ்' படத்தின் பைலட் மூவி திரைப்பட விழாக்களிலும் ஓடிடியிலும் வெளியிடப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து, 'பிளாக் ரோஸ்' திரையரங்குகளில் விரைவில் வெளியாகும். பைலட் மூவியை ஏற்கனவே பார்த்த திரையிலகினரும் இதர பிரமுகர்களும் இயக்குநர் சரணை பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படம் குறித்து பேசிய சரண், "முதல் காட்சி முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் வகையில் பரப்பரப்பான திரில்லராக 'பிளாக் ரோஸ்' இருக்கும். ஒரு மர்ம நாவலின் சில முக்கிய‌ பக்கங்களை மட்டும் படிப்பது போல் உருவாக்கப் பட்டுள்ள பைலட் மூவி படம் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். தமிழ் திரையுலகில் ஒரு புதுமையான முயற்சியாக 'பிளாக் ரோஸ்' இருக்கும்," என்று கூறினார்.

விஜயலட்சுமி மற்றும் கிளவுட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'பிளாக் ரோஸ்' திரைப்படத்திற்கு விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்ய, 'ஜோ' திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த சித்து குமார் இசை அமைத்துள்ளார். தமிழ் குமரன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கூர்மையான வசனங்களால் மதன் கார்க்கி மெருகேற்றி இருக்கிறார். ஸ்டெஃபானி ஹட்சன் மற்றும் SJ சரண் 'பிளாக் ரோஸ்' படத்திற்கு திரைக்கதையை எழுதி உள்ளனர். சுரேஷ் கல்லேரி கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE