‘தி பெட்’ ஜனவரி 2ல் வெளியீடு!

By சினி மினி

வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’. இப்படத்தினை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன் கே,.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், ப்ளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா, திவ்யா ஸ்ரீதர், விக்ரம் ஆனந்த் என முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்..
வரும் ஜனவரி-2ஆம் தேதி உலகமெங்கும் 'தி பெட்' திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனையடுத்து இந்த படத்திற்கான பத்திரிகையாளர் சிறப்புக்காட்சி நேற்று திரையிடப்பட்டது. படம் பார்க்க வருகை தந்த பத்திரிகையாளர்கள் அனைவரையும் செண்டை மேளம் முழங்க வரவேற்பு கொடுத்த ‘தி பெட்’ படக்குழுவினர், மேலும் ஒவ்வொருவருக்கும் வெள்ளை நிற பூத்துண்டு சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு வரவேற்புடன் பத்திரிகையாளர்களை வரவேற்று ஒரு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது இதுதான் முதன்முறை.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் அம்மாவாக நடித்துள்ள நடிகை திவ்யா ஸ்ரீதர் பேசும்போது,

“நான் கேரளாவைச் சேர்ந்த பெண். தி பெட் படத்தின் மூலம் தான் முதன்முதலாக தமிழ் திரை உலகில் அடி எடுத்து வைத்துள்ளேன். இது கொஞ்சம் சவாலான, துணிச்சலான கதாபாத்திரம்தான். இப்படி ஒரு கதாபாத்திரத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததற்காக நன்றி. நிச்சயம் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களைப் பேச வைக்கும்” என்று கூறினார்.
நடிகர் ப்ளாக் பாண்டி பேசும் போது,

“இயக்குநர் மணிபாரதியுடன் எனக்கு இது இரண்டாவது படம். நான் இதுவரை நண்பர்கள் கதாபாத்திரத்தில் நிறைய நடித்திருக்கிறேன். ஆனால் இந்த படம் எனக்கு புதிதாக இருந்தது. ஒரு பெட் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து இந்தக் கதையை இயக்குநர் சொல்லி இருக்கிறார். இயக்குநர் மணிபாரதியைப் பொருத்தவரை எப்போதுமே யுவுக்கும் ஏவுக்கும் நடுவில் இருக்கும் (யு/ஏ) படமாகவே எடுப்பார்.

இசையமைப்பாளர் தாஜ்நூர் சிறந்த இசையைக் கொடுத்து இருக்கிறார்” என்று பேசினார்.
இசையமைப்பாளர் தாஜ்நூர் பேசும்போது,

“ஆரம்பத்தில் இந்த படம் திரில்லர் ஜானர் என்றுதான் சொன்னார்கள். ஆனால் படத்தில் ஒரு பெட் கதை சொல்வது போல அவர்கள் உருவாக்கி இருந்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது” என்று கூறினார்.

இயக்குநர் மணிபாரதி பேசும்போது,

“படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக வெளியூர் சென்று இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரால் இயலவில்லை. நாயகி சிருஷ்டி டாங்கேவை நாங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இரண்டு முறை அழைப்பு விடுத்தும் ஏனோ அவர் வரவில்லை.

இத்தனைக்கும் அவருக்கு முழு சம்பளமும் செட்டில் செய்து விட்டோம். ஒருவேளை சம்பள பாக்கி வைத்திருந்தால் வந்திருப்பாரோ என்னவோ ?

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க ஐந்து நடிகைகள் இருக்கிறார்கள்.
அவர்களை இந்த படத்தில் உள்ள அம்மா கதாபாத்திரத்தில் பயன்படுத்த முடியாது. அழைத்தாலும் அவர்கள் நடிக்க வரமாட்டார்கள்.. அப்படி சில நடிகைகளிடம் இந்த கதாபாத்திரத்தை சொன்னபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். அதனால் தான் அதற்கு கேரளா சென்று ஒரு புதிய முகத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தோம். இவர் இனி கொஞ்ச காலத்துக்கு தமிழ் சினிமாவில் புதிய அம்மாவாக வலம் வருவார்.

படத்தில் ஐடி இளைஞர்களைத் தவறாகக் காட்டவில்லை. இதேபோல இன்னும் பல துறைகளிலும் இளைஞர்கள் ஜாலி என்கிற பெயரில் இப்படி கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அப்படி சென்றால் இறுதியில் அவர்கள் நிலை என்னவாகும் என்பதை தான் ஒரு எச்சரிக்கையாக சொல்லி இருக்கிறோம். ஒரு போலீஸ் அதிகாரியின் படுக்கை அறைக் காட்சியை காட்டுவது கூட, ஒரு போலீஸ்காரனை தேடி எந்த நேரத்தில் எல்லாம் வேலை வரும், அதனால் அவரது குடும்பத்தில் எந்தவிதமான பாதிப்பு இருக்கும் என்பதை சொல்வதற்காகத் தான் அந்த காட்சியை வைத்தோம். அதில் கூட ஒரு டான்ஸ் மாஸ்டரை மனைவியாக நடிக்க வைத்தோம். டான்ஸ் ஆடுபவர் என்றால் அதற்கு மட்டுமே அவரை பயன்படுத்த வேண்டுமா என்ன ? இத்தனைக்கும் என் முதல் படத்தில் அவர் நடனமாடியவர்தான். இந்த படத்தில் கதாபாத்திரமாக நடிக்க வைத்தேன்” என்று கூறினார்.

இதன் தொழில்நுட்பக் கலைஞர்களாக கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, தாஜ்நூர் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுத, ஜே.பி எடிட்டிங் செய்ய, பழனிவேல் கலை இயக்கம் செய்ய, இவர்களோடு ஏ.வி பழனிசாமி தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி உள்ளார்.

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE